கோவை: மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த கோடிகளில் நிதி ஒதுக்கி, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கோவை மாநகராட்சி சார்பில் கூறப்பட்டாலும், சமீபத்தில் வெளியான பொதுத் தேர்வு முடிவுகள் மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.
கோவை : மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த கோடிகளில் நிதி ஒதுக்கி, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கோவை மாநகராட்சி சார்பில் கூறப்பட்டாலும், சமீபத்தில் வெளியான பொதுத் தேர்வு முடிவுகள் மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. கோவை கல்வி மாவட்டத்தில் மட்டும் 1,697 தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம் 35,495 மாணவ, மாணவியர்கள், 108 மையங்களில் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில், வரதராஜபுரம் மற்றும் ராமலிங்கம் காலனியில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

மாநகராட்சி பள்ளிகள்
மாநகராட்சி கல்வி அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள தேர்வு முடிவு அறிக்கையில், மாநகராட்சிக்கு உட்பட்ட 27 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 675 மாணவர்கள், 1,215 மாணவியர்கள் என மொத்தம் 1,890 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். அவர்களில் 1,694 பேர் தேர்ச்சி பெற்றனர். இதனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 89.63-ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏராளமான தனியார் பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவிகிதம் தேர்ச்சி பெறும்போது, கல்வித் தரத்தில் மாநகராட்சி பள்ளிகள் பின்தங்கிய நிலையிலேயே இருப்பதற்கு முக்கிய காரணங்கள் பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடுகளும், நவீனமாக்கப்படாத கற்பித்தல் முறையும், என்கின்றனர் பெரும்பாலான கல்வியாளர்கள். குறிப்பாக, மாநகராட்சி பள்ளிகள் மேம்படுத்துதல் திட்டத்தில் இணைக்கப்பட்டு செயல்பட்டுவரும் பல மாநகராட்சி பள்ளிகளின் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் கல்வியாளர்களின் கருத்தை மேலும் உறுதி செய்துள்ளது.
இ-கார்ப்
மாநகராட்சி கல்விப் பிரிவு சார்பில் மாணவர்களின் கற்றல் திறனையும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் மேம்படுத்தும் விதமாக கடந்த வருடம் இ-கார்ப் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் படி, சுமார் 10 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இணைக்கப்பட்ட 5 மாநகராட்சி பள்ளிகளில் காணொளிக் காட்சி மூலம் மாணவர்கள் பயில நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் ஐந்து பள்ளிகளில் ஒன்றான பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 10-ம் வகுப்புத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் வெறும் 47 சதவீதம் மட்டுமே. அதாவது, தேர்வு எழுதிய 47 மாணவர்களில் வெறும் 22 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதற்கு அடுத்த இடத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வில் 50 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்று சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி இடம் பெற்றுள்ளது.
தரம்?
இப்படிப்பட்ட மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் மின்னணு தொழில் நுட்பம் மூலம் பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்கவும், நூலகங்கள் உருவாக்கவும், பள்ளிகளுக்குத் தேவையான மேசைகள் மற்றும் இருக்கைகள் கொள்முதல் செய்யவும் கடந்த ஆண்டு ரூ. 235 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள தேர்ச்சி முடிவுகள் மாநகராட்சி பள்ளிகளின் கல்வித் தரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதையே உணர்த்துகிறது.
மேலும், வரும் நிதியாண்டில் மாநகராட்சிக்கு உட்பட்ட 5 பள்ளிகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு ரூ. 27 கோடியே 51 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் மாணவர்களுக்கு உதவுமா? என்பது சந்தேகம் தான்.
கல்வியும், கற்பித்தலும் சேவை என்ற நிலைமாறி பெரும் வணிகமாக மாற்றப்பட்டுள்ள இன்றைய சூழலில், ஏழை-எளிய மாணவ, மாணவியரின் முன்னேற்றத்திற்கான ஒரே நம்பிக்கையாகத் திகழும் மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதில் மாநகராட்சி நிர்வாகம் அதிக கவனம் செலுத்த வேண்டும், கல்வித்தரத்தை உயர்த்த ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.