கோவை: தமிழக மக்கள் தண்ணீருக்கு அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கோவையில் சரியான தடுப்பணை இல்லாமல் ஓடை நீர் வீணாகி வருகிறது.
கோவை: தமிழக மக்கள் தண்ணீருக்கு அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கோவையில் சரியான தடுப்பணை இல்லாமல் ஓடை நீர் வீணாகி வருகிறது.

குரும்பபாளையம் பகுதியில் மஞ்சுப் பள்ளம் என்ற ஓடை உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் நீர் வரத்து இருந்த இந்த ஓடையில், வறட்சி, ஆக்கிரமிப்பு மற்றும் மணல் கொள்ளை காரணமாக தண்ணீர் வரத்து குறைந்தது. இருந்த போதிலும் பருவமழையின் போது இந்த ஓடையில் நீர்வரத்து இருக்கும். இந்த நிலையில், தனியார் நிறுவனம் சார்பில் கடந்த ஆண்டு அப்பகுதியில், இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டது.
முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தாலும், நவம்பர் மாதம் பெய்த மழையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட காரணத்தாலும் ஒரு தடுப்பணை முற்றிலுமாக சேதமடைந்தது. மற்றொரு தடுப்பணை சேதமடைந்து வருகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக கோவையில் மழை பெய்து வரும் நிலையில், மஞ்சுப் பள்ளம் ஓடையில் வரும் நீர் வீணாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "இந்த ஓடையால் நூற்றுக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. மணல் திருட்டு நடைபெறுவதால் நீர் தங்குவது இல்லை. தற்போது தடுப்பணைகளும் சேதமடைந்து விட்டதால், நீரைத் தேக்கி வைக்க வழியில்லாமல், வீணாக விரயமாகி வருகிறது. இதனைத் தடுத்து, கோவையில் விவசாயம் செழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றனர்.
Video: Laxman