கோவை: கேரளாவில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவ வாய்ப்பில்லை என்று சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர். ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
கோவை: கேரளாவில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவ வாய்ப்பில்லை என்று சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர். ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நிபா என்ற வகை வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. வவ்வால்கள் மூலம் பரவும் இந்த வைரஸ் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. இந்த நிபா வைரஸ் தாக்கி கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் ஒரு செவிலியர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், "தமிழகத்தில் நிபா வைரஸ் தொற்று இல்லை. இங்கு நிபா வைரஸ் தொற்று ஏற்படாதவாறு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளா-வை ஒட்டியுள்ள மாவட்டங்களை கண்காணிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பழம் தின்னும் வவ்வால் மற்றும் பன்றிகள் மூலம் நிபா வைரஸ் பரவுகிறது. காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் செய்வதை தவிர்த்து, மருத்துவமனையை அணுகவும்." என்றார்.
இதனிடையே கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நிபா வைரஸ் பாதித்த நோயாளிகளை உடனடியாகக் குணப்படுத்தும் மருந்து இதுவரை இல்லை. ஆனால், வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நோய் பாதித்தவரின் ரத்தம், சளி, வியர்வை மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவுகிறது.
காற்று மூலம் இந்த வைரஸ் பரவாது என்பதால் மக்கள் பீதியடைய வேண்டாம். வௌவால் தவிர, பிற மிருகங்கள் மூலம் நோய் பரவுவது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் அரசு எடுத்துள்ளது. வௌவால் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது, கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவிய பிறகே உணவருந்த வேண்டும். பழங்களை வெந்நீரில் கழுவிய பிறகே சாப்பிட வேண்டும்.'' என்றார்.
கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தாக்கி இறந்த முகம்மது ஸாபித் சகோதரர்களின் வீட்டை சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அவரது வீட்டு உபயோகத்துக்குப் பயன்படுத்திய குடிநீர் கிணற்றில் வௌவால்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கிணறு மூடப்பட்டது. திறந்து கிடக்கும் குடிநீர் கிணறுகள் மீது வௌவால்கள் பறக்கும் என்பதால் அவற்றை மூடி வைக்கவேண்டும் என்றும் அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.