மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரத்திற்குட்பட்ட மலைக்கிராமங்களில் உள்ள 90 கி.மீ. தூர சாலைகள் பயணிக்கவே தகுதியற்ற நிலையில் இருப்பதால், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு கூட வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரத்திற்குட்பட்ட மலைக்கிராமங்களில் உள்ள 90 கி.மீ. தூர சாலைகள் பயணிக்கவே தகுதியற்ற நிலையில் இருப்பதால், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு கூட வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் உள்ள வெள்ளியங்காடு என்னும் இடத்தில் இருந்து பில்லூர் அணை அமைந்துள்ள பரளிக்காடு வரை செல்லும் சாலையில் பூச்சமரத்தூர், தோண்டை, வேப்பமரத்தூர், வீரக்கல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. சுமார் 60 கி.மீ. நீளமுள்ள இச்சாலையின் வழியே நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கும் சென்றடையலாம். எனவே, உள்ளூர் மலைவாழ் பழங்குடியின மக்கள் மட்டுமின்றி சுற்றுலா செல்வோர் மற்றும் இதர வர்த்தக பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் இவ்வழியே சென்று வருகின்றன.

இதேபோல, தோலம்பாளையம் பகுதியில் இருந்து கோப்பனாரி வரை மலைக்கிராமங்கள் வழியே செல்லும் சுமார் 40 கி.மீ., தொலைவுள்ள சாலை வழியே கேரள மாநிலத்திற்கு செல்ல முடியும் என்பதால், போக்குவரத்து மிகுந்தே காணப்படுகிறது. ஆனால், இச்சாலைகள் முழுவதுமாக பழுதடைந்து குண்டும், குழியுமாக வாகனங்கள் கடந்து செல்லவே இயலாத வகையில் காணப்படுகின்றன. அடர்ந்த மலைக்காட்டின் வழியே செல்லும் இச்சாலையில் சென்றால் வாகனங்கள் பழுதடைந்து நின்று விடும் அல்லது விபத்துக்கள் ஏற்படும் என இப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், கல்வி பயில செல்லும் கிராம மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவது மட்டுமின்றி, அவசர மருத்துவ தேவைகளுக்காக கூட இச்சாலையைப் பயன்படுத்த முடியவில்லை என்கின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் சார்பில் பல முறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் பலனில்லை என புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் கேட்ட போது, “இச்சாலையினை புதுப்பிக்க வனத்துறையினரின் அனுமதி தேவைப்படுகிறது. முறையான அனுமதி கிடைக்காததின் காரணமாகவே சாலை சீரமைப்பு பணிகள் தாமதமாகிறது” எனக் கூறினர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள மலைக்கிராமங்களை இணைக்கும் சாலைகள் அனைத்தும் பயணிக்கவே இயலாத வகையில் பழுதடைந்து, பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை செப்பனிடப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் இப்பகுதி மக்கள்.