கோவை: அடிவாங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மீது பொய் வழக்கு போட்ட காவல் துறையை சட்டப்படி சந்திக்க இருப்பதாக அக்கட்சியின் கோவை மாநகர மாவட்ட செயலாளர் சேலஞ்சர் துரை தெரிவித்துள்ளார்.
கோவை: அடிவாங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மீது பொய் வழக்கு போட்ட காவல் துறையை சட்டப்படி சந்திக்க இருப்பதாக அக்கட்சியின் கோவை மாநகர மாவட்ட செயலாளர் சேலஞ்சர் துரை தெரிவித்துள்ளார்.
வடவள்ளி பகுதியில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்து வெளியே வந்தவர்களை உள்ளாட்சி மற்றும் நகராட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணியின் ஆதரவாளர் சந்திரசேகர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கற்களை வீசி கார் கண்ணாடியை உடைத்தனர். இதில் இரு பெண்கள் உட்பட பத்து பேர் காயமடைந்தனர்.
தாக்குதல் தொடர்பாக, அமைச்சரின் ஆதரவாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வடவள்ளி கருப்புசாமி கோவில் தினகரன் ஆதரவாளர்கள் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட ஆறு பெண்கள் உட்பட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 58 நிர்வாகிகளை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை இரண்டு மணி நேரம் அலைக்கழித்து நள்ளிரவு இரண்டு மணியளவில் குளத்துப்பாளையம் பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனையடுத்து, தாக்குதல் நடத்தியவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டங்கள் 147, 148, 188,341 ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, இன்று காலை அ.ம.மு.க., நிர்வாகிகள் மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அப்போது பொய் வழக்கு போட்ட காவல்துறையினருக்கு எதிராகவும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இது குறித்து அக்கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் சேலஞ்சர் துரை கூறுகையில், "பொய் வழக்கு போட்டு எங்களை கைது செய்துள்ளனர். இதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். கட்சி நிர்வாகிகளை அடித்தும், காரை சேதப்படுத்தியதற்கும் வழக்குப் பதிவு செய்யாமல் ஆளுங்கட்சி அமைச்சருக்கு சாதகமாக உண்மைக்குப் புறம்பாக எங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கான பதிலை காவல்துறையினர் கண்டிப்பாக சொல்ல வேண்டிய நிலை வரும்." என்றார்.
இந்த நிலையில், தனது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க.,வின் துணை பொதுச்செயலாளர் தினகரன் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கோவை தங்களுக்கு பாத்தியப்பட்ட பகுதி போல சர்வாதிகார போக்கில் செயல்படும் அமைச்சர் வேலுமணிக்கும், அவரிடம் கை கூலி போல் செயல்படும் காவல்துறைக்கும் எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.