டெல்லி : கர்நாடக சட்ட சபையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : கர்நாடக சட்ட சபையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக வந்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் வஜூபாய் வாலா நேற்று முன்தினம் இரவு அழைப்பு விடுத்தார்.
117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை கொண்டிருப்பதாக கூறி, ஆட்சி அமைக்க உரிமை கோரிய மத சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ‘ரிட்’ வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் எடியூரப்பா முதலமைச்சர் பதவி ஏற்க தடை விதிக்க கோரினர்.
இந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூஷண் ஆகியோரைக் கொண்ட சிறப்பு அமர்வை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமைத்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், காங்கிரஸ், மஜத பெரும்பான்மை இருக்கிறது என்று கூறிய நிலையில் பாரதீய ஜனதாவை மட்டும் ஆட்சி அமைக்க அழைத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், கர்நாடக சட்ட பேரவையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிடலாமா? பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாரா? என்று நீதிபதி சிக்ரி கேள்வி எழுப்பினார்.
"நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்களுக்கே முதல் வாய்ப்பு வழங்க வேண்டும். நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார். நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். கால தாமதமின்றி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும். எம்.எல்.ஏ.,க்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். என்று காங்கிரஸ், ம.ஜ.த., கட்சிகள் சார்பாக வாதிடப்பட்டது. அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் சட்டப்பேரவைக்கு வந்து வாக்களிக்க பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, தகுந்த பாதுகாப்பு வழங்க கர்நாடக டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டு உள்ளது.