கோவை : கோவையில் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்களின் கார் கண்ணாடிகளை உடைத்ததாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை : கோவையில் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்களின் கார் கண்ணாடிகளை உடைத்ததாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வடவள்ளி பகுதியில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், கூட்டம் முடிந்து வீட்டிற்குச் சென்ற அவர்களின் கார்கள் மீது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளரான சந்திரசேகரின் ஆட்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
பல்வேறு கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட நிலையில், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் கூறுகையில், "கூட்டம் முடிந்து எங்களது கார்களில் திரும்பிக் கொண்டிருந்தோம். முதலில், எங்கள் மாவட்ட செயலாளர் சேலஞ்சர் துறையின் கார் தாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து சுமார் 15 கார்களை கடுமையான ஆயுதங்கள் கொண்டு தாக்கினர்.

இதில், இரண்டு பெண்கள் உள்பட எட்டு பேர் காயமடைந்தனர். தாக்கியவர்களை விட்டுவிட்டு, எங்களை கைது செய்துவிடுவோம் என போலீசார் மிரட்டுகின்றனர். எங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்" என்றனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட தினகரனின் ஆதரவாளர்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து, தொண்டாமுத்தூர் ராஜலட்சுமி மண்டபத்தில் அடைத்தனர்.
Video: Laxman