கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியில் மாதிரி சாலை அமைக்கும் திட்டத்திற்கான டெண்டர் வரும் 22-ம் தேதி நடத்தப்படவுள்ளது.
கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியில் மாதிரி சாலை அமைக்கும் திட்டத்திற்கான டெண்டர் வரும் 22-ம் தேதி நடத்தப்படவுள்ளது.
கோவை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் டி.பி சாலை, டி.விசாமி சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, என்.எஸ்.ஆர் சாலை, மசக்காளிபாளையம் சாலை, சங்கனுார் சாலை ஆகிய ஆறு இடங்களில் மாதிரிசாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதை, ஸ்மார்ட் பெஞ்ச், வாகனங்கள் நிறுத்தும் இடம், தொலைதொடர்பு மற்றும் மின்சார கம்பிகள் போன்றவற்றை தரைவழியில் அமைத்தல், பாதாள சாக்கடை இணைப்பு போன்ற பல்வேறு வசதிகள் இந்த மாதிரி சாலைகளில் உருவாக்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக டி.பி.சாலையில் 1.8 கிலோ மீட்டர் நீளம் மற்றும் 21 மீட்டர் அகலத்தில், ரூ.25 கோடி செலவில் மாதிரிசாலை உருவாக்குவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதற்கான டெண்டர் வரும் 22-ம் தேதி நடத்த முடிவு செய்யபட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் நிறுவனம், டி.பி.சாலையில் மாதிரி சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து டி.விசாமி சாலை மற்றும் ரேஸ்கோர்ஸ் சாலைகளுக்கான மாதிரிசாலை பணிகளை விரைவில் தொடங்கவுள்ளனர். மற்ற சாலைகளான, என்.எஸ்.ஆர். சாலை, மசக்காளிபாளையம் சாலை மற்றும் சங்கனுார் சாலை ஆகியவை, 'ஸ்மார்ட் சிட்டி' எல்லைக்குள் வராததால், இந்த சாலைகளுக்கான திட்டப் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.