கோவை: கோவையில் இருந்து இரவு நேரங்களில் பல்வேறு நகரங்களுக்கு விமானங்களை இயக்கும் வகையில், எரிபொருளுக்கு வரிச்சலுகை வழங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் இருந்து இரவு நேரங்களில் பல்வேறு நகரங்களுக்கு விமானங்களை இயக்கும் வகையில், எரிபொருளுக்கு வரிச்சலுகை வழங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும், இதுவரை இரவு நேரங்களில் விமானங்கள் இயக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், கோவைக்கு இணைப்பு முறையில் வரும் விமானங்கள் இரவில் இங்கேயே நிறுத்தப்பட்டு விடுகின்றன. இவ்வாறு நிறுத்தப்படும் விமானங்களை இரவில் இயக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, எரிபொருளுக்கான வரிச்சலுகை வழங்கினால் விமானங்களை இரவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள காவல்துறை அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோவைக்கு வந்தார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "இரவு இங்கு நிறுத்தப்படும் இணைப்பு விமானங்களை பல்வேறு இந்திய நகரங்களுக்கு இயக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் விமான எரிபொருள் வரிச்சலுகை வழங்கப்பட உள்ளது, என்றார்.
மேலும், தொடர்ந்து பேசிய அவர், காவல்துறையினரின் செயல்பாடுகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை மக்கள் பார்வையிட்டு அறிந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, காவல்துறை இயக்குனர் ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதலமைச்சரின் வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அருங்காட்சியகம் அமைந்துள்ள ரயில் நிலையம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக அடைக்கப்பட்டன.