கோவை : தேர்வு முடிவுகள் வருவதால் காலையிலேயே வீட்டை விட்டு வெளியே போன 12 வகுப்பு பள்ளி மாணவன் மீண்டும் வீடு திரும்பாததால் பெற்றோர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
கோவை : தேர்வு முடிவுகள் பார்க்க வீட்டை விட்டுச் சென்ற 12-ம் வகுப்பு மாணவன் திரும்பவில்லை என்று அவரது பெற்றோர் கண்ணீர் மல்க மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

டி.வி.எஸ்., நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் அஸ்வின் பாரிக்கர். சாயிபாபா காலனியில் உள்ள இராமலிங்க செட்டியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தனது மதிப்பெண் பார்க்க அவர் காலையிலேயே வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
மாணவரின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, மாநகர காவல் ஆணையாளரிடம் மகனை கண்டுபிடித்து தரக்கோரி கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.
இது குறித்து மாணவனின் தந்தை கூறுகையில், "எனது மகன் 12-ம் வகுப்பு தேர்வு எழுதியிருப்பார் என்று நினைத்திருந்தோம். ஆனால், இன்று அவரைத் தேடி பள்ளிக்குச் சென்ற போது தான், அவர் தேர்வு எழுதவில்லை என்ற விபரம் தெரியவந்தது.
பள்ளி நிர்வாகம் முன்னரே என் மகன் தேர்வு எழுதாத தகவலை தந்து இருந்தால், என் மகனை கவனமாக பார்த்திருப்பேன். இப்போது என் மகனைக் காணவில்லை. அவரை போலீசார் மீட்டுக் கொடுக்க வேண்டும்." என்று வேதனையுடன் தெரிவித்தார்.