கர்நாடகாவில் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், பெங்களூரூவில் உள்ள ஈகிள்டான் விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், பெங்களூரூவில் உள்ள ஈகிள்டான் விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்ட நிலையில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தேசிய அளவில் பேசப்பட்டது.
இந்த நிலையில், நடந்து முடிந்த கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிட்டவில்லை. பா.ஜ.க., அதிகபட்சமாக 104 இடங்களும், காங்கிரஸ் 78 இடங்களும், மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத) 37 இடங்களையும் வெற்றி பெற்றுள்ளன. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.,விற்கு 8 எம்.எல்.ஏ.,க்களே பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க., கட்சிகள் தங்கள் கட்சி எம்.எல்,ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசித்து வருகின்றன. பா.ஜ.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் எடியூரப்பா தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்திற்கு பிறகு ஆளுநரை சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் கோர உள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க உள்ளதாகவும், பா.ஜ.க., உடன் கூட்டணி கிடையாது என அறிவித்துள்ளார்.

ஆனால், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசுடன் கூட்டணி வைப்பதை விரும்பாமல் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோன்று, காங்கிரஸ் கட்சியிலும் சிலர் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி, கர்நாடகாவில் ஆட்சியமைக்க பா.ஜ.க., திட்டமிட்டுள்ளது. எனவே, காங்கிரஸ் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை தக்க வைத்துக் கொள்ள கூவத்தூர் பார்முலாவை கையில் எடுத்துள்ளது. இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த எம்.எல்.ஏ.,க்கள் தங்குவதற்காக பெங்களூருவில் உள்ள ஈகிள்டன் ரிசார்ட்டில் 120 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன. பின்னர், சொகுசு பேருந்தின் மூலம் அவர்கள் அந்த ரிசார்ட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் புதிய அரசு ஆட்சி அமைக்கும் வரை எம்.எல்.ஏ.,க்களை இந்த ரிசார்ட்டிலேயே தங்க வைக்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.