நீலகிரி: உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்த காரணத்தால் படகு இல்லத்தில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.
நீலகிரி: உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்த காரணத்தால் படகு இல்லத்தில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி, கோடநாடு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை முதலே உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயில் அடித்து வந்தது. ஆனால், பிற்பகல் முதல் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ததது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.

மேலும், பாதாள சாக்கடையில் இருந்து சாலைகளில் கழிவு நீர் வெளியேறியதால் பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகினர். படகு இல்ல சாலை சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருப்பதால் மழை நீர் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். தற்போது பெய்து வரும் மழையால், மலை தோட்ட காய்கறிகள் மற்றும் தேயிலை விவசாயத்தில் ஈட்டுப்பட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ரத்து
இந்த நிலையில், கோடை விழாவின் ஒரு பகுதியாக இன்று உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் படகு போட்டிகள் நடைபெறவிருந்தது. கனமழை காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டதோடு, படகு சவாரியும் ரத்து செய்யப்பட்டது.
