கோவை : தற்கொலை ஒரு முடிவல்ல என்று கூறி பிளஸ் 2 மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் கோவையை சேர்ந்த இருபது வயது இளைஞர்.
கோவை : தற்கொலை ஒரு முடிவல்ல என்று கூறி பிளஸ் 2 மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் கோவையை சேர்ந்த இருபது வயது இளைஞர்.

புலியகுளம் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் இன்பெண்ட்(20). இந்த இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பாடல் பாடுவதில் ஆர்வம் கொண்ட இவர், பாடல் வரிகளை தானே எழுதி, மெட்டுப் போட்டு பாடல் பாடி வருகிறார்.
தேர்வு முடிவுகள்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தற்கொலைக்கு எதிராக பாடல்களை எழுதியுள்ளார். அந்த பாடலில், தேர்வு தோல்விக்கு மரணம் என்பது விடையல்ல என்பது போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து இன்பெண்ட் கூறுகையில், "பரிட்சை முடிஞ்சு ரிசல்ட் வரும் போதெல்லாம் மாணவர்கள் தற்கொலை செய்வது நம் நாட்டில் வழக்கம் ஆகிருச்சு. தோல்வியால் தற்கொலைன்னு செய்தியை கேட்டா பதட்டமாக இருக்கும். ஒரு நிமிடத்தில் யோசிக்காமல் உயிரை விடுராங்க. இறப்புக்குப் பின், பெத்தவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்கன்னு கொஞ்சம் யோசிச்சா அந்த முடிவுக்குப் போக மாட்டார்கள்.
அது மட்டுமல்ல, சுத்தியிருக்கும் சொந்தங்கள், நண்பர்கள் எல்லாருமே வேதனையடைவாங்க. தேர்வுல தோல்வியடைந்தால் மீண்டும் எழுதி பாஸ் பண்ணலாம். அதை நினைக்காமல் தற்கொலை முடிவுக்கு போவது தவறானது. இதைத் தடுக்க ஏதாவது பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தனும்னு ஆசைப்பட்டு தான் இந்த பாடல் பாடினேன். உயிருங்கிறது ஒரு முறை தான் கிடைக்கும். பரிட்சைகள் எப்போ வேணாலும் எழுதலாம்." என்றார்.