கோவை : கோவை விமான நிலையத்தில் இரு வேறு விமானங்களில் இருந்து வந்த பயணிகளிடமிருந்து கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி பதிப்புள்ள 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யபட்டது.
கோவை : இரு வேறு விமானங்களில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ஐந்து கிலோ தங்கத்தை விமான நிலையத்தில் வைத்து வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கக் கட்டிகளை கடத்தி வரும் சம்பவம் கோவையில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக துபாய் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து, விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று சார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது உனைஸ் என்ற இளைஞர் ஒருவரிடம் சுமார் மூன்று கிலோ எடை கொண்ட 52 தங்கக் கட்டிகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அந்த வாலிபரை கைது செய்த அதிகாரிகள். கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 96 லட்சத்து 52 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதே போல். கடந்த 10-ம் தேதி இலங்கையிலிருந்து கோவை வந்த விமானத்தில் வந்த ஏழு பயணிகளிடமிருந்து இரண்டு கிலோ தங்கக் கட்டிகளை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதன் மதிப்பு ரூ. 65 லட்சத்து 89 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் அவர்களையும் கைது செய்து விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஒரே வாரத்தில் கோவை விமான நிலையத்தில் சுமார் ஒன்றரை கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.