மேட்டுப்பாளையம்: மூங்கிலை மரவகை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கி விட்டதால் மூங்கில் வளர்ப்பின் மூலம் கூடுதல் வருவாய் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வேளாண் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
மேட்டுப்பாளையம்: மூங்கிலை மரவகை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கி விட்டதால் மூங்கில் வளர்ப்பின் மூலம் கூடுதல் வருவாய் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வேளாண் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
பாரம்பரிய கட்டிட கலையில் இயற்கை சார்ந்த கட்டுமான பொருட்களின் பங்கு அதிகமாக இருந்தது. இதில் இரும்புக்கு நிகரான பலம் கொண்ட முக்கியமான பொருட்களில் ஒன்று மூங்கில். அறிவியல் வளர்ச்சி காரணமாக தற்போது கான்கிரீட் கட்டிடங்கள் வந்துவிட்டது. இதனால், மூங்கில் பயன்பாடு குறைந்தது.
இருந்த போதிலும், காகிதம் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளை மூங்கில் மூலம் பெற்று வருகிறோம். இதுவரை மூங்கில், மரவகை பட்டியலில் இருந்தது. இதனால், அவற்றை வளர்த்து விற்பனைக்காக வெட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்து வந்தது. மேலும், தமிழகத்தில் வளர்க்கப்படும் மூங்கிலை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லவும் தடை இருந்தது.
சந்தை வாய்ப்பு
ஆனால், தற்போது மூங்கிலை மரவகை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கிவிட்டது. இதனால் மூங்கிலுக்கான சந்தை வாய்ப்பு அதிகரித்துள்ளது. இனி இந்தியாவிற்குள் தேவை அதிகமுள்ள எந்த பகுதிக்கும் மூங்கிலை எவ்வித கட்டுப்பாடுமின்றி கொண்டு செல்ல இயலும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூங்கிலுக்கான தேவை அதிகம் உள்ளதால், தமிழக விவசாயிகள் மூங்கில் வளர்ப்பின் மூலம் கூடுதல் வருவாய் பெற இயலும் என வேளாண் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வேளாண் வல்லுனர்கள், "பிற பயிர்களைப் போல் அதிக பராமரிப்பு மற்றும் நீர் மூங்கில் வளர்ப்புக்குத் தேவையில்லை. ஒரு ஹெக்டேர் நிலத்தில் 400 மரக்கன்றுகள் வரை நடவு செய்ய முடியும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூபாய் இரண்டு லட்சம் வரை விவசாயிகள் வருமானம் பெற முடியும். மூங்கில் வளர்ப்பு முறை மற்றும் அதன் சந்தை வாய்ப்பு குறித்து ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு பயிற்றுவிக்கப்படும்" என்று தெரிவிக்கின்றனர்.