கோவை: குடிநீர் கட்டணம் செலுத்தாத கோவை மாநகராட்சியைக் கண்டித்து குடிநீர் வடிகால் சங்க ஊழியர்கள் பாரதி பார்க் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: குடிநீர் கட்டணம் செலுத்தாத கோவை மாநகராட்சியைக் கண்டித்து குடிநீர் வடிகால் சங்க ஊழியர்கள் பாரதி பார்க் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை உடனடியாக அமல் படுத்த வேண்டும், குடிநீர் கட்டணமாக மாநகராட்சியால் செலுத்தப்பட வேண்டிய ரூ. 210 கோடி உடனடியாக வசூல் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., குடிநீர் வடிகால் சங்கத்தினர் பாரதி பார்க் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களுக்கு இதுவரை ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், குடிநீர் வடிகால் வாரியம் ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ளதால் வாரியத்தின் சொந்த நிதியில் இருந்து நடைமுறைப்படுத்திக்கொள்ள அரசாணை வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் கட்டணமாக உள்ளாட்சி அமைப்புகள் இதுவரை ரூ. 500 கோடி பாக்கி வைத்துள்ளது. இதில், கோவை மாநகராட்சி மட்டும் ரூ. 210 கோடி பாக்கி வைத்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் கோவை மாநகராட்சி சுமார் ரூ. 250 கோடி வரிவசூல் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், உடனடியாக குடிநீர் வடிகால் வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய நிலுவை பாக்கிகளை வசூல் செய்ய வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளின் நிலுவை பாக்கிகளை விரைவில் வசூல் செய்து குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். வேலைப்பளுவை உயர்த்தி ஆட்குறைப்பு செய்வதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சி.ஐ.டி.யு., தமிழ்நாடு வாட்டர் சப்ளை அண்டு ட்ரெயினேஜ் போர்டு வொர்க்கர்ஸ் யூனியன் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் உதவி தலைவர் பிரான்சிஸ், பொதுச்செயலாளர் ஆர்.சரவணன், பொருளாளர் கே.ஆர்.ராஜேந்திரன், சம்மேளன முன்னாள் தலைவர் பாலகுமார், உதவி செயலாளர் பெலிக்ஸ் மற்றும் குடிநீர் வடிகால் ஊழியர்கள் பங்கேற்றனர்.