கோவை: செல்வசிந்தாமணி குளம் நிரம்பி உடையும் நிலை ஏற்பட்டதால், நேற்று இரவு ஷட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால், அப்பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.
கோவை: செல்வசிந்தாமணி குளம் நிரம்பி உடையும் நிலை ஏற்பட்டதால், நேற்று இரவு ஷட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால், அப்பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.
கோடை வெயில் அதிகரித்து அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கோவையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, முத்தனன் குளம், செல்வசிந்தாமணி குளம் மற்றும் சிங்காநல்லூர் குளம் ஆகிய 5 குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து குளங்கள் நிரம்பும் நிலையில் உள்ளன.

இந்நிலையில், நேற்று இரவு செல்வபுரம் பகுதியிலுள்ள செல்வசிந்தாமணி குளம் நிரம்பி உடையும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து, பொதுப்பணி துறை அதிகாரிகள் முன்னறிவிப்பு இன்றி குளத்தின் ஷட்டர்களை திறந்து விட்டனர். மேலும், செல்வபுரம் பகுதியிலிருந்து உக்கடம் பெரிய குளத்திற்கு செல்லும் கால்வாயில் உள்ள அடைப்பினை அதிகாரிகள் சரி செய்தனர்.

இதனால், கால்வாயை ஒட்டி அமைந்துள்ள அசோக் நகர் மற்றும் சேத்துமா வாய்க்கால் போன்ற குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், "கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால் குளங்கள் நிரம்பிவரும் நிலையில், எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி தண்ணீரை திறந்து விட்டதால் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்ததுள்ளது. மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறையால் முறையாக கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருந்ததே, இது போன்ற நிலை ஏற்படக் காரணம்." என்று குற்றம் சாட்டினர்.
Video: Laxman