பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஜாக்டோ ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஜாக்டோ ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
மீண்டும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தை இன்று முற்றுகையிடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அந்த அமைப்பின் நிர்வாகிகளை போலீசார் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுமென அந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று காலை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து இறங்கிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 1,000 பேரை போலீசார் கைது செய்தனர். ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ள போராட்டம் காரணமாக தலைமைச்செயலகம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தலைமைச்செயலகம், மற்றும் சேப்பாக்கம் பகுதியில் சுமார் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தலைமைச் செயலகத்துக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகளை வைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து சென்னையில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் அரசு ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்கின்றனர். இன்று பிற்பகலில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலை ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கூடி வேலைநிறுத்தம் செய்வது குறித்து முடிவெடுப்போம் என ஜாக்டோ ஜியோ அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் கூறி உள்ளார்.
இதனிடையே, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தக் கோரி சென்னை பல்கலைக்கழகம் அருகே தடையை மீறி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் எழும்பூர் பள்ளியில் தங்கவைக்கப்பட்டனர். அப்போது, ஆசிரியர் தியாகராஜன் திடீரென உயிரிழந்தார். அவரது உடல் சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கண் பார்வையற்ற தியாகராஜன் பாபநாசம் அரசுப் பள்ளியில் சிறப்பு ஆசிரியராக இருந்தவர் ஆவர்.