கோவை : பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான குட்கா ஆலை வழக்கின் விசாரணை மேற்பார்வை அதிகாரியாக இருந்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தியிடம் இருந்தப் பொறுப்பை மாற்றி, கூடுதல் கண்காணிப்பாளர் அனித்தாவுக்கு அந்தப் பொறுப்பினை வழங்கி டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.
கோவை : பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான குட்கா ஆலை வழக்கின் விசாரணை மேற்பார்வை அதிகாரியாக இருந்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தியிடம் இருந்தப் பொறுப்பை மாற்றி, கூடுதல் கண்காணிப்பாளர் அனித்தாவுக்கு அந்தப் பொறுப்பினை வழங்கி டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம், கண்ணம்பாளையத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த குட்கா ஆலை வழக்கு திடீர் திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. ஆலையின் உரிமையாளர் கைது செய்யப்படாத நிலையில், குட்கா ஆலை விவகாரத்தில் போராட்டம் நடத்திய தி.மு.க-வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் தி.மு.க.,வை சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே, குட்கா ஆலைக்கு, தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் தளபதி முருகேசன் உதவியதாக, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தெரிவித்தார். இது அக்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, தி.மு.க., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கடந்த வாரம் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சீல் வைக்கப்பட்ட குட்கா ஆலையில், கடந்த வாரம் போலீசார் மீண்டும் நுழைந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களை, நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக பார்சல் செய்யும் பணிகள் நடப்பதாக கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காததால் சர்ச்சை ஏற்பட்டது.
தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகி வரும் இந்த வழக்கு விசாரணையின் மேற்பார்வையாளராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி பொறுப்பு வகித்தார். இந்த நிலையில், அவருக்கு பதிலாக கூடுதல் கண்காணிப்பாளர் அனிதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து, தமிழக காவல்துறை தலைவர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு விசாரணை விபரங்களை தினமும் தெரிவிக்கவும் அவர் உத்தரவிட்டதாக தெரிகிறது.
அதேபோல், மேல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக் குழுக்களை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொள்வதால் கண்காணிப்பாளரின் தினசரி பணிகள் பாதிக்கப்படுவதால், அதற்கென ஒரு தனி அதிகாரி ஒதுக்கப்பட்டுள்ளார். என்றும், அதிகாரி மாற்றம் செய்யப்படவில்லை எனவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.