கோவை: கோவை நகரில் கனமழை பெய்து வரும் நிலையில், பேரிடர்களை சமாளிக்கும் வகையில் தயாராக இருக்குமாறு பேரிடர் மேலாண்மை குழுக்களுக்கு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை: கோவை நகரில் கனமழை பெய்து வரும் நிலையில், பேரிடர்களை சமாளிக்கும் வகையில் தயாராக இருக்குமாறு பேரிடர் மேலாண்மை குழுக்களுக்கு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கோவை நகரில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரில் உள்ள பிரதான குளங்கள் நிரம்பி வருகின்றன. மேலும், மழைக்கு நடுவே சூறாவளிக்காற்று வீசுவதால், நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்கம்பிகள் சேதமடைகின்றன. ட்ரான்ஸ்ஃபாமர்கள் வெடித்து சிதறுகின்றன. இதனால், இரவு நேரங்களில் பல மணி நேரம் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
நகரின் முக்கியமான சாலைகளில் மரங்கள் வேரோடு முறிந்து வாகனங்கள் மீது விழுகின்றன. இதுமட்டுமில்லாமல், முக்கிய போக்குவரத்து சந்திப்புகளிலும், ரயில்வே பாலங்களின் கீழ் பகுதியிலும், மழைநீர் தேங்கிக் கொள்வதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதுபோன்ற பிரச்சனைகளை மாநகராட்சி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பொதுமக்களின் உதவியோடு அவ்வப்போது சரிசெய்து வருகின்றனர்.
இந்நிலையில், அடுத்த சில தினங்களுக்கும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள ஏதுவாக, ஆபத்து காலங்களில் உதவும் பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் தயாராக இருக்குமாறு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.