நீலகிரி: கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி இளைஞர் உயிர் இழந்த சம்பவத்தில் யானைகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி கூடலூர் - கேரளா நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி: கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி இளைஞர் உயிர் இழந்த சம்பவத்தில் யானைகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி கூடலூர் - கேரளா நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள கருக்கபாளி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (29). நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில், அப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்ட வேண்டும், கிராமத்தைச் சுற்றி அகழி வெட்ட வேண்டும், சோலார் மின்வேலி அமைத்து காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை அப்பகுதி மக்கள் தமிழக - கேரளா நெடுஞ்சாலையில் உள்ள பாடந்துறை பகுதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்துறை, காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் காட்டு யானைகளிடம் இருந்து அப்பகுதி மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக தமிழகம் - கேரளா இடையே ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.