திருப்பூர்: திருப்பூரில் பெய்த கனமழையின் காரணமாக புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர்: திருப்பூரில் பெய்த கனமழையின் காரணமாக புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வெப்பசலனம் காரணமாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு ஒருமணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக, நகரின் பல பகுதிகளில் மரம் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. திருப்பூர் மாவட்டம் அவினாசி சாலை தண்ணீர்பந்தல் பகுதியில் துரைசாமி என்பவர் புதிதாக கட்டிடம் ஒன்றை கட்டி வருகிறார். அந்தப் புதிய கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர், மழையின் காரணமாக இடிந்து அருகிலிருந்த ஒட்டு வீட்டின் மீது விழுந்தது. அதில், வசித்து வந்த மணப்பாறை பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளி திருப்பதியின் மனைவி ஐஸ்வர்யாவின் மீது இடிபாடுகள் விழுந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், வீட்டிலிருந்த அவரது உறவினர்கள் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அனைவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

விதிகளை மீறி கட்டிடம் கட்டியிருந்ததே விபத்துக்குக் காரணம் என்று அருகிலிருந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இறந்துபோன ஐஸ்வர்யாவிற்கு ஒரு வயதில் பெண் குழந்தையும், மூன்று வயதில் ஆண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
