கோவை: தி.மு.க., மாணவரணியின் மாவட்ட பொறுப்பாளர் ஆறுமுக பாண்டியனை கோவை இராமநாதபுரம் போலீசார் மோசடி வழக்கில் கைது செய்துள்ளனர்.
கோவை: தி.மு.க., மாணவர் அணியின் மாவட்ட பொறுப்பாளர் ஆறுமுக பாண்டியனை கோவை இராமநாதபுரம் போலீசார் மோசடி வழக்கில் கைது செய்துள்ளனர்.
புலியகுளம் ரெட் பீல்டு பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா ராஜசேகர். இவர் இராமநாதபுரம் காவல்நிலையத்தில் தி.மு.கவைச் சேர்ந்த ஆறுமுக பாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள் மீது மோசடி மற்றும் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில், தன்னை ஏமாற்றி, சொத்துக்களின் பேரில் கடன் வாங்கியதாகவும், தங்களை சொந்த வீட்டில் இருந்து வெளியேறவும் நெருக்கடி அளித்ததாகக் கூறியுள்ளனர். மேலும், தன்னிடம் தி.மு.க., பிரமுகர் பலமுறை தகாத முறையில் நடக்க முயன்றதாகவும் அவர் அந்தப் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் இராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தி.மு.க., மாவட்ட மாணவர் அணி இணை அமைப்பாளர் ஆறுமுக பாண்டியனை கைது செய்தனர். பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட ஷீலா ராஜசேகர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்க வந்தார். அப்போது, அவர் கூறியதாவது :- எங்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் மூலம் தான் ஆறுமுகபாண்டியன் எங்களுக்கு அறிமுகமானார். அப்போது அவர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்பது எங்களுக்கு தெரியாது. பைனான்சியர் மற்றும் தொழில்நிறுவனம் நடத்தி வருவது மட்டும் தான் எங்களுக்கு தெரிந்தது. எனது கணவருக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து உள்ளதால் எங்களுடைய குடும்ப வருமானம் நின்றுவிட்டது. அதனால் நெருக்கடியில் இருந்தோம்.

அந்த வேளையில், ஆறுமுகபாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள் உங்களுடைய இடத்தை வங்கியில் வைத்து பணம் கொடுங்கள், மாதம் ரூ. 2 லட்சம் உங்களுக்கு தருகிறோம் என்றனர். அதே நிலையில், கடனையும் அடைத்து விடுகிறோம் என்றும் கூறினர். நாங்களும் அதை நம்பி வங்கியில் இடத்தின் பத்திரத்தை வைத்து ரூ. 3 கோடி ஆறுமுக பாண்டியனிடம் கொடுத்து, அவரது நண்பரின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றம் செய்தோம். அவர்கள் அதனைப் பிரித்து கொண்டனர். ஆனால், அவர்கள் வங்கிக்கு பணம் செலுத்தவில்லை.
மேலும், எங்களுக்கு இதுவரை ரூ. 15 லட்சம் மட்டுமே கொடுத்து உள்ளனர். இந்தநிலையில், அவர்கள் தினமும் வீட்டிற்கு வந்து எங்களை மிரட்டி வருகின்றனர். மேலும், ஆறுமுகபாண்டியன் கூடுதலாக அந்த இடத்தின் பேரில் ரூ. 1 கோடிக்கு கடன் பெற்று உள்ளார். தற்போது, அந்த இடத்தை ஜப்தி செய்ய வங்கி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதனால், நாங்கள் கடன் வாங்கி அபராதத் தொகையை செலுத்தி உள்ளோம். எனவே, அவர்களிடம் இருந்து அந்த பணத்தையும், இடத்தையும் மீட்டு தருமாறு ஆணையாளரிடம் புகார் அளிக்க வந்து உள்ளோம், என்றார்.