கோவை: கண்ணம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்ட குட்கா தயாரிப்பு ஆலை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரை, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை: கண்ணம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்ட குட்கா தயாரிப்பு ஆலை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரை, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் டெல்லியை சேர்ந்த அமித்ஜெயின் என்பவருக்குச் சொந்தமான குடோன் உள்ளது. ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ள பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, பான்பராக் போன்றவை உற்பத்தி செய்து வந்துள்ளார். இந்த சட்டவிரோத தொழிற்சாலைக்கு டெல்லியில் இருந்து மூலப்பொருட்களைக் கொண்டு வந்து குட்கா உற்பத்தியை செய்துவந்துள்ளனர்.
இந்நிலையில் குட்கா தொழிற்சாலை செயல்படுவது குறித்த தகவல் அறிந்த காவல் துறையினர் அங்கு திடீர் சோதனை நடத்தினர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையின் போது குட்கா பொருட்கள் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 20 டன் மூலப்பொருட்களும் விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த 79 பண்டல்கள் குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் இருந்து குட்கா பொருட்களை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். பின்னர் சீல் வைக்கப்பட்ட ஆலையில் உள்ள 3 லட்சம் குட்கா புகையிலை பாக்கெட் உட்பட 1400 கிலோ குட்கா பொருட்கள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே உரிமையாளர் அமித் ஜெயின், மேலாளர் ரகுராம் உட்பட 5 பேர் மீது சூலூர் காவல் நிலையத்தில் சிகரெட் மற்றும் இதர புகையிலை தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும் ஆலையின் மேலாளர் ரகுராமன், வடமாநில தொழிலாளர்கள் அஜய், ராம்தேவ், சோஜிராம் ஆகிய நான்கு பேரை கைது செய்த காவல் துறையினர், டெல்லியில் உள்ள ஆலையின் உரிமையாளர் அமித் ஜெயினை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சூலூர் நீதிமன்ற நீதிபதி வேடியப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நால்வரையும் , வருகின்ற மே மாதம் 13 ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி வேடியப்பன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் நான்கு பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.