கோவை : கோவையில் சட்டவிரோதமாக குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர்.
கோவை : கோவையில் சட்டவிரோதமாக குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர்.

சூலூர் பகுதியில் உள்ள கண்ணம்பாளையத்தில் ஒரு தனியார் குடோனில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, பான்பராக் மற்றும் போதை தரும் குட்கா உற்பத்தி செய்யும் மிகப்பெரிய தொழிற்சாலை செயல்பட்டு வந்துள்ளது. இதையறிந்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று இரவு 7 மணி முதல் சுமார் பத்துமணி நேரத்திற்கும் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பல கோடி மதிப்புள்ள போதை பாக்குகள் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 20 டன் மூலப்பொருட்களும், விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த 79 பண்டல்கள் குட்காவும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை ஒரு அறையில் வைத்து கண்ணம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் லோகநாயகி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, "கடந்த சில நாட்களாக இந்தத் தொழிற்சாலைக்கு மற்ற மாநிலங்களில் இருந்து அதிகப்படியான லாரிகள் வந்து செல்கின்றன. இந்த நிலையில், தொழிற்சாலைக்குள் திடீரென நேற்று வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பல மணி நேரமாக சோதனை செய்தனர்," என்றனர்.
சென்னை உயர்நீதிமன்றம் இந்த குட்கா விவகாரத்தை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்டுள்ளதையடுத்து, இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற பொருட்கள் கோவையில் தயாரித்து விற்பனை செய்யபடுவது கோவை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே, இன்று தி.மு.க., சார்பில் தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.