கோவை : கோவை ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக வாகனம் நிறுத்த தனியாக இட வசதி செய்யப்பட்டு வருவதாக சேலம் கோட்டம் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
கோவை : கோவை ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக வாகனம் நிறுத்த தனியாக இட வசதி செய்யப்பட்டு வருவதாக சேலம் கோட்டம் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மத்திய ரயில்நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, மாற்றுத் திறனாளிகள் தனியாக வாகனங்கள் நிறுத்த வசதிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போதுள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த ஒருபுறம், அதாவது ரயில்நிலைய முன்புற வாசல் அருகே மட்டும் இடவசதி தரப்பட்டிருந்தது. தற்போது, நிறுத்துமிடத்தின் இருபுறங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த இடவசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் வரும் மாற்றுத்திறனாளிகள் அவற்றில் இருந்து இறங்கி எளிதாக ரயில்நிலையத்தின் உள் செல்ல வசதியாக, ரயில்நிலைய முன்புற வாசல் அருகே தங்கள் வாகனங்களை நிறுத்தவும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, பணிகள் நடைபெற்று வரும் காரணத்தால், பணிகள் நிறைவுற்றவுடன், அதற்கான குறியீட்டுப்பலகைகள் அந்தந்த இடங்களில் நிறுவப்படும் என கூறப்பட்டுள்ளது.