கோவை : கோவையில் கனமழையுடன் பலத்த காற்று வீசியதால் பெரும்பாலான நிறுவனங்களின் மேற்கூரைகள் பறந்ததால் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
கோவை : கோவையில் கனமழையுடன் பலத்த காற்று வீசியதால் பெரும்பாலான நிறுவனங்களின் மேற்கூரைகள் பறந்ததால் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
கோவையில் இன்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த மேற்கூரைகள் பறந்தன. பலத்த சத்தத்துடன் அவை கீழே விழுந்ததை கண்டு ஆங்காங்கே நின்று கொண்டிருந்தவர்கள் மற்றும் ஊழியர்கள் அலறி அடித்து கட்டிட வளாகத்தின் உள்ளே ஓடினர்.தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக புழுதி பறந்து அலுவலகத்தினுள் வந்ததால், பழைய கட்டிடத்தில் பணி புரிந்த ஊழியர்கள் கதவை அடைத்து விட்டனர். இந்த சூறாவளி காற்றின் காரணமாக மின் தடையும் ஏற்பட்டதால் சிரமத்திற்கு ஆளாகினர். சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நிறுத்தி விட்டு காற்றின் வேகம் தணிந்த பின்னர் கிளம்பி சென்றனர்.
இதனைத் தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது. வெயிலின் உக்கிரத்தால் கடந்த சில தினங்களாக பொதுமக்கள் அவதியடைந்து வந்த நிலையில், தற்போது பெய்த மழையின் காரணமாக சில்லென்ற காற்று வீசுகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இடையர்பாளையம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. துடியலூர், கவுண்டம்பாளையம், பீளமேடு, காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேலும், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சாலைகளில் சாய்ந்ததால் சிலர் படுகாயம் அடைந்தனர்.
மழை நின்ற பிறகு கோவையின் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஈடுபட்டுள்ளது.