நீலகிரி: நீலகிரியில் குண்டும், குழியுமாக காணப்படும் பைக்காரா சாலையை சீரமைக்க உதகை மாநராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா..? என சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
நீலகிரி: நீலகிரியில் குண்டும், குழியுமாக காணப்படும் பைக்காரா சாலையை சீரமைக்க உதகை மாநராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா..? என சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் அதிகப்படியான சுற்றுலா தலங்களை உள்ளடக்கிய மாவட்டமாகும். இதில், தோட்டக்கலை மற்றும் சுற்றுலாத் துறைக்கு சொந்தமான சுற்றுலா ஸ்தலங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக, அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளை கவரும் சுற்றுலாத் துறைக்கு சொந்தமான பைக்காரா படகு இல்லமும் ஒன்று. உதகையிலிருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பைக்காரா படகு இல்லத்தைக் காண, அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
கூடலூர் செல்லும் சாலை பிரிவிலிருந்து பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலை பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த சாலை செப்பனிடப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. கூடலூர் பிரிவிலிருந்து பைக்காரா படகு இல்லத்திற்கு செல்லும் இந்த ஒரு கி.மீ. தூரமுள்ள சாலை, முறையாக வடிகால்கள் எடுக்கப்படாததால், மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.

எனவே, நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், படகு இல்லம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
