குட்கா ஊழல் முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குட்கா ஊழல் முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய அமைச்சர், போலீஸ் உயரதிகாரிகள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சென்னையில், குட்கா வியாபாரிகளிடம் கடந்த 2016 ஜூலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில், சிக்கிய ஒரு டைரியில், தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி., ராஜேந்திரன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பெயர் இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்தது. அது தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் கொடுத்து, நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டது.
இதனிடையே, இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் தலைமையிலான அமர்வு, குட்கா ஊழல் குறித்த லஞ்ச ஒழிப்பு விசாரணையை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- பல அதிகாரிகள் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளதால், வழக்கு விசாரணை நேர்மையாக நடக்க சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்படுகிறது. அப்போது, தான் மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படும். இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும். குட்கா உற்பத்தி, விற்பனை, சந்தையில் கிடைப்பது உள்ளிட்ட அனைத்தையும் விசாரிக்க வேண்டும். குட்கா ஊழல் தொடர்பாக போதிய விளம்பரம் அளித்து மக்களின் தகவல்களை பெற வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறியுள்ளனர்.