கோவை : கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கோவை : கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கோடை காலம் தொடங்கிய முதலே கோவையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெளியே தலை காட்ட முடியாத அளவிற்கு வெப்பத்தின் அளவு கோர தாண்டவம் போடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், மதுரை, சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் விருதுநகரில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. திருப்பூரில் அதிகபட்சமாக 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில், "கோவையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை வரை வானம் வறண்ட நிலையில் காணப்படும். காலை நேரங்களில் 38.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. அதேசமயம், இரவு நேரங்களில் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக்கூடும்.
திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களிலும் வறண்ட வானமே காணப்படும். திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கனவே 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகிவிட்டது. கோவையைப் பொறுத்தவரையில் காற்றின் வேகம் 10-ல் இருந்து 12 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது," என்றார்.