கோவை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கோவையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக ஐந்தாம் கட்ட விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் இன்று தொடங்கினார்.
கோவை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கோவையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக ஐந்தாம் கட்ட விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் இன்று தொடங்கினார்.
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சட்டம் ஒழுங்கு முழுமையாக பாதிக்கப்பட்டது. அமைதியான முறையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதே இந்த பிரச்சினைக்கு காரணம் என்று ஒரு சாரர் குற்றம்சாட்டினர். இளைஞர்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததே வன்முறைக்குக் காரணம் என்று சிலர் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு யார் காரணம்? என்று விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கோவையில் பொதுமக்கள் மற்றும் போலீசாரிடம் நான்கு முறை விசாரணை நடத்தியுள்ளது.
தொடர்ந்து, இறுதி விசாரணையான ஐந்தாம் கட்ட விசாரணையை நடத்த விசாரணைக் குழு இன்று கோவை வந்துள்ளது. இதுகுறித்து விசாரணைக் குழு ஆணையர் ராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இன்று முதல் மூன்று நாட்கள் நடக்கும் இறுதி விசாரணையில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி உட்பட 6 காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெறுகிறது. சம்மன் கொடுத்து விசாரணைக்கு வராதவர்களை நாங்கள் வற்புறுத்துவதில்லை. ஜல்லிக்கட்டு தொடர்பான விசாரணையில் கோவையில் பாதிக்குப் பாதி பேர் காவல்துறைக்கு ஆதரவாகவும், எதிராகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். அடுத்து மதுரையிலும், சென்னையிலும் விசாரணை தொடரும். பத்திரிக்கையாளர்களிடம் நடந்த விசாரணையில் அவர்கள் ஆதாரங்களையும், புகைப்படங்களையும் கொடுத்துள்ளனர். மேலும் மதுரையில் 800-க்கு மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. அதில் அலங்கநால்லூரில் போராடியவர்கள் போலீசாருக்கு ஆதரவாகத்தான் வாக்குமூலம் அளித்துள்ளனர்." என்றார்.