கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே தந்தையால் விற்க முயன்ற 3 மாதம் பெண் குழந்தையை சைல்ட் லைன் அதிகாரிகள் மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே தந்தையால் விற்க முயன்ற 3 மாதம் பெண் குழந்தையை சைல்ட் லைன் அதிகாரிகள் மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கவுண்டம்பாளையம் குமரன் நகரில் வசித்து வரும் வட மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்சொன்னா. கூலித்தொழிலாளியான இவருக்கும், இவரது மனைவிக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில், 3 மாத குழந்தையை வளர்க்க முடியாததால், குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்துள்ளார். இந்த தகவல் அறிந்த அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் 1098 என்ற இலவச எண்ணுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வந்த சைல்ட் லைன் அதிகாரிகள், ஸ்சொன்னாவிடம் பேசி குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

இது குறித்து மாவட்ட சைல்ட் லைன் ஒருங்கிணைப்பாளர் உமாதேவி கூறியதாவது :- எங்களுக்கு நேற்று இரவு சுமார் 08.45 மணி அளவில் கவுண்டம்பாளையம் பகுதியில் தந்தையே குழந்தையை விற்க முயற்சி செய்வதாக 1098-க்கு புகார் வந்தது. அதனடிப்படையில், நாங்கள் உண்மை நிலை அறிந்து குழந்தையை மீட்டோம். பின்னர், கோவை அரசு மருத்துமனையில் சுமார் 12.30 மணியளவில் குழந்தையை நாங்கள் ஒப்படைத்தோம். இதில், குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை நலமாக இருப்பதாகத் தெரிவித்ததாக கூறினார், எனத் தெரிவித்தார்.
இது குறித்து கோவை அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவர் அலுவலர் சௌந்திரவேல் கூறுகையில், "இந்தாண்டில் இந்தக் குழந்தை நான்காவதாக பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளது. இதுபோன்று வரும் குழந்தைகளை அரவணைத்து பார்த்து, அதன் எடை, உடல்நலம் அனைத்தும் கவனித்து அரசின் குழந்தைகள் பாதுகாப்பு சரணாலயத்தில் விட்டு விடுவோம். அதேபோல, இந்த 3 மாத குழந்தைக்கு சௌந்தர்யா என பெயரிட்டுள்ளோம். இந்தக் குழந்தை நலமுடன் இருப்பதால் கிணத்துக்கடவில் உள்ள குழந்தைகளைப் பாதுகாக்கும் சரணாலயத்தில் அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி ஒப்படைத்துள்ளோம்," என்றார்.