கோவை: வெள்ளலூர் பகுதியில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கை பராமரிப்பதற்காக பிரத்யேக நவீன வகை புல்டோசர் இயந்திரம், ஆளில்லா ட்ரோன் விமானம் மற்றும் நீர் பீய்ச்சி வாகனம் ஆகிய இயந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கோவை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ரூ. 4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவை: வெள்ளலூர் பகுதியில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கை பராமரிப்பதற்காக பிரத்யேக நவீன வகை புல்டோசர் இயந்திரம், ஆளில்லா ட்ரோன் விமானம் மற்றும் நீர் பீய்ச்சி வாகனம் ஆகிய இயந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கோவை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ரூ. 4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநகரில் சேகரிக்கப்படும் 600 மெட்ரிக் டன் அளவிலான குப்பைகள், வெள்ளலூரில் உள்ள குப்பைக் கிடங்கில் சேகரிக்கப்படுகிறது. 650 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த குப்பைக் கிடங்கில் 250 ஏக்கர் பரப்பளவில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றது. இதை சுற்றி ஏராளமான குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன.

தினம்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளில் ஏற்படும் தீ விபத்துகளால் அவ்வப்போது அப்பகுதி முழுவதும் கரும் புகையால் சூழப்படுகிறது, மேலும், மழைக் காலங்களில் குப்பை குவியலில் இருந்து வரும் துர்நாற்றம் குடியிருப்பு வாசிகளை வதைத்து வருகிறது.

குட்டி விமானங்கள்
இதுகுறித்து பேசிய மாநகராட்சி அதிகாரிகள், "வெள்ளலூர் குப்பைக் கிடங்கில், வெப்பத்தினாலும், சமூக விரோதிகளாலும் தொடர்ந்து தீ விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனைக் கண்காணிப்பதற்காக ஆளில்லா குட்டி விமானம் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை வார விடுமுறை நாட்களில் அனுமதியின்றி உள்ளே நுழைபவர்களைத் தடுத்து நிறுத்த உதவும். மேலும், மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களை அளக்கவும் அது பயன்படும். அந்த குட்டி விமானங்கள் சுமார் 6 மணி நேரம் வரை தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டவை. விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்றதும் கண்காணிப்பு பணிகள் தொடங்க உள்ளது. தீ விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்காக நீர் பீய்ச்சி வாகனம் மற்றும் புல்டோசர் இயந்திரம் ஆகியவற்றையும் புதிதாக வாங்க திட்டமிடப்பட்டுள்ளது." என்றார்.
ரூ.4 கோடி
மாநகராட்சி எல்லைக்குள் கொட்டப்படும் 600 மெட்ரிக் டன் அளவிலான திடக் கழிவுகள் குப்பைக் கிடங்கு வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இயற்கை உரம் தயாரிக்கும் ஆலை மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் ஆலையில் சேர்க்கப்படுகின்றது. இது போக 390 மெட்ரிக் டன் அளவிலான கழிவுகள் குப்பைக் கிடங்கு வளாகத்தில் உள்ள திறந்தவெளியில் கொட்டப்படுகின்றது.
இவற்றில் ஏற்படும் தீ விபத்தினால், சுற்றியுள்ள பகுதிகளில் புகை மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகிறது. எனவே, குப்பை கிடங்கு வளாகத்திற்குள் வெளி ஆட்கள் நுழைவதைக் கண்காணிக்கவும், தீ விபத்துகள் ஏற்படும் பகுதிகளை கண்டறியவும், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கான அளவியல் பணிகளை மேற்கொள்ளவும் ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் ஒன்று வாங்க முடிவு செய்யப்பட்டு, இந்நிதியாண்டில் ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீர் பீய்ச்சி வாகனம்
தீ விபத்துகளைத் தடுப்பதற்காகவும், குப்பைகளிலிருந்து உருவாகும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், கொசு மற்றும் ஈ தொல்லைகளைக் குறைப்பதற்காகவும் நுண்ணுயிர் நாசினி கலந்த தண்ணீர், வஜ்ரா/வருண் போன்ற நீர் பீய்ச்சி வாகனங்கள் மூலம் தெளிக்கப்பட்டு வருகின்றது.

தற்சமயம், இந்த பணிக்காக தீயணைப்பு துறை மற்றும் ரிசர்வ் போலீஸ் படையின் அதி விரைவு முகாமிலிருந்து வாகனங்கள் வரவழைக்கப்படுகிறது. அவசரக் காலங்களில் சரியான நேரத்தில் இவை வர முடியாததால் தீ விபத்துகளைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு குப்பைக் கிடங்கு பராமரிப்புக்கென பிரத்யேகமாக நவீன வகை நீர் பீய்ச்சி வாகனம் ஒன்று புதிதாக வாங்குவதற்கு ரூ. 60 லட்சம் இந்நிதியாண்டில் மாநகராட்சி சார்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.
புல்டோசர் இயந்திரம்
தீ விபத்துகளைக் கட்டுப்படுத்தும் வகையில், எரிந்த நிலையில் உள்ள குப்பைகளின் மீது மண் மூடப்பட்டு தீ மேலும் பரவாமல் தடுப்பதற்காக நவீன வகை புல்டோசர் இயந்திரம் ரூ. 300 லட்சம் மதிப்பீட்டில் தமிழக அரசு திடக்கழிவு மேலாண்மை நிதியிலிருந்தோ அல்லது தூய்மை இந்தியா திட்டத்தின் நிதியிலிருந்தோ வரும் நிதியாண்டில் கொள்முதல் செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.