கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காட்டு யானைகள் புகுந்து வாழை தோட்டங்களை சேதப்படுத்தியதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காட்டு யானைகள் புகுந்து வாழை தோட்டங்களை சேதப்படுத்தியதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் உள்ள மலையடிவார கிராமங்களில் காட்டு யானைகளின் ஊடுருவலும், இதனால் ஏற்படும் சேதங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. வாழை, தென்னை, கரும்பு, காய்கறி பயிர்கள் என விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்ட இக்கிராமங்களுக்குள் இரவானால் நுழையும் யானைகள் விளை பொருட்களை அழித்து சேதப்படுத்தி வருகின்றன. கடந்த சில நாட்களாக அருகில் உள்ள மலைக்காட்டை விட்டு வெளியேறும் பத்து யானைகள் கொண்ட கூட்டமொன்று கண்டியூர், பணப்பாளையம், தேக்கம்பட்டி, சீளியூர், தாயனூர் போன்ற மலையடிவார கிராமங்களில் புகுந்து தொடர்ந்து சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் பணப்பாளையம் கிராமத்தினுள் புகுந்த இந்த யானைக்கூட்டம், அங்குள்ள சாந்து பாஷா என்ற விவசாயியின் வாழை தோட்டத்தினுள் நுழைந்து 700-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் அடியோடு அழிக்கப்பட்டதால், ரூ. 2 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயி வேதனை தெரிவித்துள்ளார். கடன் பெற்று வாழை பயிரிட்ட தனக்கு, இதற்கான இழப்பீட்டை அரசு வழங்கினால் மட்டுமே தொடர்ந்து விவசாயத்தை தொடர இயலும் என்கின்றார் விவசாயி சாந்து பாஷா.
காட்டு யானைகளால் தொடர்ந்து இழப்புகளை சந்தித்து வரும் கிராம விவசாயிகளுக்கு, வனத்துறை சார்பில் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை மிக குறைந்த அளவில் வழங்கப்பட்டாலும், கால தாமதமாக வழங்கப்படுவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, வனத்துறையினர் உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்குவதோடு, யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுகின்றனர்.