மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள இந்து முன்னணி பிரமுகர் தனபாலின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள இந்து முன்னணி பிரமுகர் தனபாலின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் காட்டூரில் உள்ள பெருமாள் லே அவுட் பகுதியில் வசித்து வருபவர் தனபால். இவர், இந்து முன்னணியின் நகர துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இன்று அதிகாலை 4 மணியளவில் இவரது வீட்டின் மீது சிலர் பெட்ரோல் அடைக்கப்பட்ட இரண்டு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் குண்டுகள் சரிவர வெடிக்காத காரணத்தால், அவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் மட்டும் சிறிய அளவிலான சேதங்களுடன் தப்பியது.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தனபாலின் வீட்டின் முன் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பழுதாகி இருந்த காரணத்தினால் இச்சம்பவம் குறித்த காட்சிகள் ஏதும் போலீசார் வசம் சிக்கவில்லை.
கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த இரண்டு மாதத்தில் 4-வது முறையாக இதுபோன்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே, இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி, குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.