கோவை: உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கோவையில் நடத்திய ரெய்டில் ரூ.3.69 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை: உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கோவையில் நடத்திய ரெய்டில் ரூ.3.69 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தாமஸ் வீதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஒரு குடோனில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர். அப்போது, ரூ.3.69 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி பி. விஜய லலிதாம்பிகை கூறுகையில், "கோவையை பொறுத்தவரையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.

கடந்த வாரம் கோவையில் நெய் தயாரிக்கும் நிறுவனங்களில் தர ஆய்வு நடத்தினோம். பின்னர், கோடைகாலத்தை முன்னிட்டு பழச்சாறு தயாரிக்கும் கடைகளில் தரமான பழச்சாறு தயாரிப்பதை உறுதி செய்யும் விதமாக ரெய்டு நடத்தினோம். காந்திபுரம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் நேற்று முன்தினம் இந்த ஆய்வு நடைபெற்றது.
இந்த சூழலில், நேற்று இரவு தாமஸ் வீதியில் உள்ள குடோனில் நடத்திய ஆய்வில் ரூ. 3.69 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன," இவ்வாறு அவர் கூறினார்.
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மாநகரின் பல்வேறு பெட்டிக் கடைகளில் விற்பனையாவதும், இதைத் தடுக்க பொதுமக்கள் அவ்வப்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.