திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பகுதியில் செயல்படும் சிற்ப கலைக்கூடங்களை வேறு இடத்திற்கு மாற்ற மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் காலக்கெடு விதித்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பகுதியில் செயல்படும் சிற்ப கலைக்கூடங்களை வேறு இடத்திற்கு மாற்ற மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் காலக்கெடு விதித்துள்ளனர்.
திருமுருகன்பூண்டி பகுதியில் அதிக தூசியின் காரணமாக காற்று மாசுபடுவதுடன், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வரும் சிற்ப கலைக் கூடங்களை மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக, திருப்பூர் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் பூண்டி பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வரும் திருமுருகன்பூண்டி சிற்ப கலைக் கூடக் கலைஞர்கள், பொதுமக்கள் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையில் 9 மாத காலத்திற்குள் திருமுருகன்பூண்டி சிற்ப கலைக் கூடத்தை சேவூர் அருகே குரும்பபாளையம் பகுதிக்கு இடம் மாற்றம் செய்து கொள்ள வேண்டும், அந்தப் பகுதிக்கு அரசு சார்பில் குடிநீர், சாலை வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் எனப் பேச்சுவார்த்தையில் அறிவுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக சிற்ப கலைஞர்கள் கூறுகையில், "மாற்று இடம் சென்ற பின்னர் அப்பகுதி மக்கள் மீண்டும் எங்களை வேறு பகுதிக்கு செல்ல வேண்டும் என கூறக் கூடாது, கலைஞர்களுக்கு மருத்துவ வசதிகள் செய்து தர வேண்டும்," எனக் கோரிக்கை விடுத்தனர்.