நீலகிரி: மனித விலங்குகள் மோதலை தடுக்கும் வகையில் சிறப்பு குழுக்கள் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.
நீலகிரி: மனித - விலங்குகள் மோதலை தடுக்கும் வகையில் சிறப்பு குழுக்கள் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியைக் கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், யானை, காட்டெருமை, கரடி போன்ற வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி கிராமப் புறங்களிலும், நகர் பகுதிகளிலும் வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் காட்டெருமை, கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விளை நிலங்களை சூறையாடி வருகின்றன. இதனால், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு, மனித உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.
இதனைத் தடுக்கும் முயற்சியில் வனத்துறை சார்பில் 9 பேர் கொண்ட சிறப்பு குழுக்களை இன்று உதகையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் வன விலங்குகள் தொடர்பாக பொதுமக்கள் உடனடியாக 0423-2440968 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தொடர்பு கொண்டால், உடனடியாக அப்பகுதிக்கு சிறப்பு குழுக்கள் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று வனவிலங்குகளை விரட்டும் பணியில் ஈடுபடுவார்கள். தற்போது, நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 3 சிறப்பு குழுக்கள் ஈடுபடவுள்ளனர்.
