தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு அரசை விட ஆளுநரின் அறிவிப்புகளே முதலில் குரல் கொடுப்பதால், ஆட்சி செய்வது யார் என்ற சந்தேகம் பொதுமக்களிடையே கிளம்பியுள்ளது.
தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு அரசை விட ஆளுநரின் அறிவிப்புகளே முதலில் குரல் கொடுப்பதால், ஆட்சி செய்வது யார் என்ற சந்தேகம் பொதுமக்களிடையே கிளம்பியுள்ளது.
தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஆட்சி நடந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கைகளை தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் அருப்புக் கோட்டை கல்லூரி பேராசிரியை ஒருவர் மாணவிகளை பாலியலுக்கு வலியுறுத்தியது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, அந்தப் பேராசிரியை கைது செய்து, இதற்கு பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இது தொடர்பாக, அரசு தரப்பில் இருந்து இன்னும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. தலைமை செயலாளர் அந்தஸ்திலிருந்து ஓய்வு பெற்ற சந்தானம் விரைவில் விசாரணையை தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் அலுவலகத்தின் இந்த நடவடிக்கையின் மூலம் தமிழக அரசு மீதான விமர்சனங்கள் மேலும் எழுத் தொடங்கியுள்ளன. வழக்கமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுதான் நிர்வாகமாகச் செயல்படும். ஆனால், இப்போது பல அறிவிப்புகள் நேரடியாக ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியாகின்றன. பிறகு மக்களால் தேர்வுசெய்யப்பட்ட அரசு எதற்காக..? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில் விசாரணைக்கு உத்தரவிடுவதாக ஆளுநர் கூறுகிறார். இந்த மாதிரியான நேரடியாக நிர்வாகம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டா..? என்ற கேள்வியும் பரவலாகக் கேட்கப்பட்டு வருகிறது.