திருப்பூரில் மது குடிக்க பணம் தராத காரணத்தால் நண்பரை அடித்துக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் : திருப்பூரில் மது குடிக்க பணம் தராத காரணத்தால் நண்பரை அடித்துக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். திருப்பூர் மாவட்டம் நெசவாளர் காலனியில் தங்கி கூலி தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில், இன்று அப்பகுதியில் உள்ள நல்லாற்றங்கரையில் தலை மற்றும் முகத்தில் படுகாயங்களுடன் வேல்முருகன் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இச்சம்பவம் குறித்து அவர் பணியாற்றிய இடம் மற்றும் அவர் தங்கியிருந்த பகுதிகளில் விசாரித்தனர். அப்போது, சுபாஷ் என்பவருடன் வேல்முருகன் கடைசியாக சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, சுபாஷிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வேல்முருகனிடம் மது அருந்த பணம் கேட்ட போது அவர் தர மறுத்ததால் அருகில் இருந்த கட்டையால் அடித்து தாக்கி கொலை செய்ததாக சுபாஷ் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அவரை வேலம்பாளையம் காவல் துறையினர் கைது செய்தனர்.
மது அருந்த பணம் தராததால் நண்பனை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.