கோவை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் தூத்துக்குடி வரை பைக் பேரணி செல்கின்றனர்.
கோவை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் தூத்துக்குடி வரை பைக் பேரணி செல்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளிவரும் நச்சுப்புகையால் அப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு பல்வேறு நோய்கள் வருவதோடு, சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுவதாகக் கூறி கடந்த 54 நாட்களாக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் கோவை பைக்கர்ஸ் கிளப்பைச் சேர்ந்த கவிசன், அமின், விக்னேஸ் ஆகிய மூன்று இளைஞர்கள் கோவையிலிருந்து தூத்துக்குடி வரை சென்று மீண்டும் கோவை வரையிலும் பேரணி செல்ல திட்டமிட்டனர்.
அதன்படி, தங்களது இருசக்கர வாகனத்தில் இன்று கோவையிலிருந்து தூத்துக்குடி கிளம்பினர்.
இவர்களது பேரணிகளுக்கு பல இளைஞர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, விக்னேஸ் கூறுகையில், "ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்கள் அதிகளவு பங்கேற்க வேண்டும். ஒரு பிரச்சனை வரும் போது முந்தைய பிரச்சனைகளை நாம் மறந்து விடுகிறோம். ஸ்டெர்லைட் வந்த பின் நியூட்ரினோ திட்டத்திற்கான எதிர்ப்பை மறந்துவிட்டோம். காவிரி பிரச்சனை வந்தவுடன் ஸ்டெர்லைட் பிரச்சனை மறந்து விட்டோம்.
மக்கள் பிரச்சனைக்கு நாம் அனைவரும் தொடர்ந்து போராட வேண்டும். அரசால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால் மெரினாவில் போடப்பட்ட 144 தடை உத்தரவை திரும்ப பெறவேண்டும். அப்போது, இளைஞர்களே போராடி ஸ்டெர்லைட்டை மூட வைப்போம்." என்றார்.