கோவை : இந்திய தேசியக் கொடியை காலில் மிதித்தபடி புகைப்படம் எடுத்து சமூக வளைதலங்களில் பதிவிட்ட இளைஞரை ஆனைமலை போலிசார் கைது செய்தனர்.
கோவை : இந்திய தேசியக் கொடியை காலில் மிதித்தபடி புகைப்படம் எடுத்து சமூக வளைதலங்களில் பதிவிட்ட இளைஞரை ஆனைமலை போலிசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் வெற்றிவேல்(24). தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் உறுப்பினராக உள்ளார். காவிரி மேலாண்மை, நியூட்ரினோ திட்டம், ஸ்டெர்லைட் ஆலை போன்ற விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசின் மீது கோபம் கொண்ட இவர் கடந்த ஞாயிறன்று இந்திய தேசிய கொடியை காலில் மிதித்து புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இந்த நிலையில், நேற்று மாலை கொடி அவமதிப்பு தொடர்பாக வெற்றிவேல் மீது ஆனைமலை போலிசார் தேசியக் கொடி அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, அவரை பொள்ளாச்சி நீதித்துறை நடுவர் எண் 1 நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போலீசார் வெற்றிவேலை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இது குறித்து தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் செய்தி தொடர்பாளர் பிரபாகரன் கூறுகையில், "தொடர்ச்சியாக இந்திய அரசு தமிழர்களை வஞ்சித்து வருகிறது. மக்களின் வாழ்வாதார கோரிக்கையை புறந்தள்ளிவிட்டு வாழ்வை அழிக்கும் ஆபத்தான திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வருகிறது. இதை அடிக்கடி ஆதங்கத்தோடு பேசி வந்த வெற்றிவேல் மன வெறுப்பில் இது போன்ற செயலில் ஈடுபட்டுவிட்டார்." என்றார்.