சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கோவை விமான நிலையத்தில் விமானப் பணி பெண்கள் பயணிகளுடன் நடனமாடிய நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
கோவை : சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கோவை விமான நிலையத்தில் விமானப் பணி பெண்கள் பயணிகளுடன் நடனமாடிய நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெண்களுக்காக சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில், மகளிர் தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, விமான நிலையத்திற்கு வரும் பெண் பயணிகளின் வசதிக்காக 'நாப்கின் வெண்டார் மெஷின்' திறந்து வைக்கப்பட்டது. இதனை மாவட்ட பயிற்சி ஆட்சியர் சரண்யா ஹரி அறிமுகம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து, 101 வயது ஆன யோகா பாட்டி நாணம்மாள் கவுரவிக்கப்பட்டார்.
பின்னர், பயணிகளைக் குதூகலப்படுத்தும் விதமாக இண்டிகோ விமானப் பெண் ஊழியர்கள், பயணிகளுடன் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மகளிர் தினத்தின் முக்கிய நிகழ்வாக, 127 பயணிகளுடன் சென்னையில் இருந்து கோவை வரை இயக்கப்பட்ட ஏர் இந்தியா 539 என்ற விமானத்தைப் பெண் விமானி ரம்யா, துணை விமானி விருந்தா நாயர் ஆகியோர் இயக்கினர். அவர்களது குழுவில், ரஜனி, சைஜா, வர்ஷா, பிரியங்கா, ராஷ்மி சுரபா ஆகிய பணிப்பெண்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த விமானமானது, கோவை விமான நிலையம் வந்தடைந்த போது, கோவை விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம், ஏர் இந்தியா கோவை மண்டல மேலாளர் கிரிஜா மற்றும் அதன் ஊழியர்கள் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன்பின்னர், கேக் வெட்டி கொண்டாடி, தங்களது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர்.