வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணத்தை உரிய விசாரணை நடத்த அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை: வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணத்தை உரிய விசாரணை நடத்த அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகராட்சிக்குச் சொந்தமாக வெள்ளலூர் பகுதியில் 650 ஏக்கர் பரப்பளவில் குப்பைக் கிடங்கு உள்ளது. மாநகராட்சி பகுதியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுகிறது. தனியார் அடுக்குமாறு குடியிருப்புகள், காய்கறிகள் மார்கெட்டுகள் என பெறப்படும் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது.மற்ற பகுதிகளில் சேகரிக்கப்படும்
மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் பிரிக்கப்படாமல் இந்த பகுதியில் கொட்டப்பட்டு வரும் குப்பையில் கடந்த சனிக்கிழமை மதியம் 3.30 மணியளவில் தீப்பிடித்தது. வானை நோக்கி எழுந்த கரும் புகையால் அப்பகுதியில் உள்ள மக்கள் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டனர். இரண்டு நாட்களாக தீயணைப்பு படை வீரர்களின் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தின் உண்மையான காரணங்கள் கண்டறியும் பொருட்டு, நேற்று கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் 5 மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
இக்குழுவில் மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் நடராஜன், செயற்பொறியாளர் லட்சுமணன், கிழக்கு மண்டல செயற்பொறியாளர் பார்வதி, செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் மாநகர நல அலுவலர் சந்தோஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த விசாரணைக்குழு தீ விபத்து பற்றி உரிய விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை விரைந்து சமர்ப்பிக்குமாறு மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.