கோவை மாநகரில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
கோவை: கோவை மாநகரில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
சமீபத்தில் தமிழக அரசு பேருந்து கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்த நிலையில், உயர்த்தப்பட்ட கட்டணத்தில் இருந்து சிறிய அளவில் மட்டும் மாற்றம் செய்தது தமிழக அரசு. போக்குவரத்துக் கழகம் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாலேயே பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசுத் தரப்பில் பல 'அடடே' விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.
வேறு வழியின்றி மேலும் ஒரு சுமையை தங்கிக் கொண்டு பயணிக்க ஆரம்பித்தனர் மக்கள். இந்த நிலையில், அரசு பேருந்துகள் முறையான பராமரிப்பின்றி இயக்கப்படுகின்றது. கோவையில் படு மோசமான நிலையில் இயங்கி வரும் பேருந்துகளில் பயணிக்கும் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கோவை மாநகர பேருந்தான 63 என்ற தடம் எண் கொண்ட பேருந்து உக்கடத்தில் இருந்து கீரணத்தம் வரை செல்கிறது. இந்த பேருந்தின் பின் பக்கம் கண்ணாடி இல்லாமலும், இருக்கைகள் பழுதடைந்து ஆடுவதாகவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், கீரணத்தம் பகுதிக்கு மிகவும் குறைவான பேருந்துகள் உள்ளதாகவும், வேறு வழியின்றி பாதுகாப்பற்ற இந்த பேருந்தில் பயணிப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்துள்ளதால் சாலையில் உள்ள தூசிகள் பேருந்தின் உள்ளே புகுந்து பயணிப்பவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மாவட்ட போக்குவரத்து கழகம் இம்மாதிரியான பேருந்துகளை சரி செய்து இயக்கிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், கட்டணத்தை மட்டும் உயர்த்திய தமிழக அரசு, பேருந்துகளின் தரத்தை உயர்த்த தவறிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சட்டியுள்ளனர்.