அரசு பள்ளி மாணவர்கள் 32 பேர் தங்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: அரசு பள்ளி மாணவர்கள் 32 பேர் தங்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை நஞ்சுண்டாபுரம் அனுப்பர்பாளையத்தில் 6 முதல் 10 வகுப்பு வரை செயல்படும் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 120 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஆங்கிலம், தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு மட்டும் ஆசிரியர்கள் உள்ளனர் என்றும் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கு கடந்த 8 மாதங்களாக ஆசிரியர்கள் நியமிக்கப் படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்த நிலையில், அந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் கூட இல்லை என்றும், உடனடியாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரி 32 மாணவர்கள் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கடந்த 19-ம் தேதி மாவட்ட கல்வி அலுவலரிடம் மாணவர்களின் பெற்றோர்கள் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தினால் வகுப்புகளை புறக்கணித்து மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.