நேபாள நாட்டில் நடைபெற்ற தெற்காசியப் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த கோவை வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
கோவை : நேபாள நாட்டில் நடைபெற்ற தெற்காசியப் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த கோவை வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
நேபாள ஒலிம்பிக் சங்கம் சார்பில் ஐந்தாவது தெற்காசிய டேக்வாண்டோ போட்டி நேபாள நாட்டில் உள்ள கன்சன்பூர் உள் அரங்கில் கடந்த மாதம் 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான், பாகிஸ்தான், உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300 வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் தமிழகம், டெல்லி மற்றும் பரிதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்தம் 70 வீரர்கள் பங்கேற்றனர்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு பேர் இப்போட்டியில் பங்கேற்றனர். இதில், பல்வேறு எடை பிரிவுகளில் 6 வீரர், வீராங்கனைகள் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். 54 கிலோ சீனியர் ஆண்கள் எடை பிரிவில் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மாணவர் எஸ்.அஜயும், 55 கிலோ ஜூனியர் எடை பிரிவில் பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஏ.அஜயும், 45 கிலோ ஜூனியர் எடை பிரிவில் லிசிக்ஸ் பள்ளி மாணவர் ஆதிஷ், 59 கிலோ எடை பிரிவில் செளடேஸ்வரி வித்யாலயா பள்ளி மாணவர் ஸ்ரீஹரன், 52 கிலோ ஜூனியர் பெண்கள் பிரிவில் அதே பள்ளியைச் சேர்ந்த அவந்திகாவும், 42 கிலோ பிரிவில் பிரமிதா ஆகியோர் 6 தங்கப் பதக்கங்களை வென்று கோவைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ரோட்டரி கேலக்ஸி சங்கம் சார்பில் கோவை மாவட்டம் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசுகளை கோவை மாவட்ட ரோட்டரி சங்கத்தின் உதவி கவர்னர் கோகுல்ராஜ், முன்னாள் உதவி கவர்னர் முத்துராமன் ஆகியோர் வழங்கினர்.
பரிசளிப்பு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரர் ஸ்ரீஹரன் கூறும்போது, "போட்டிகள் சற்று கடினமாக இருந்தது. குளிர் அதிகமாக இருந்தது", என்றார்.
54 கிலோ சீனியர் ஆண்கள் எடை பிரிவில் தங்கம் வென்ற எஸ்.அஜய் கூறியதாவது :- இந்த வெற்றிக்கு பெற்றோர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி கிடைப்பதில் சிரமம் உள்ளது. இந்தியாவிற்கு தங்கம் வெல்வதே தனது லட்சியம். இவ்வாறு கூறினார்.