கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து நீர் திறந்து விடக் கோரி கேரளாவில் தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், இருமாநில எல்லையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
கோவை: கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து நீர் திறந்து விடக் கோரி கேரளாவில் தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், இருமாநில எல்லையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

பிஏபி திட்டத்தின் கீழ் ஆழியாறு அணை மற்றும் சோலையாறு அணையில் உள்ள நீரை தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்கள் ஒப்பந்த அடிப்படையில் பங்கிட்டு வருகின்றன. தற்போது, அணைகளின் நீர்மட்டம் கடும் சரிவை சந்தித்திருப்பதால், கேரளாவிற்கான நீர் திறந்துவிடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கீழ் ஆழியாறு அணையில் இருந்து நீர் தரக்கோரி தமிழக வாகனங்கள் மீது கேரளாவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை சித்தூர் எம்எல்ஏ கிருஷ்ணன் குட்டி ஆதரவாளர்கள் நிகழ்த்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மீனாட்சிபுரம் சோதனைச்சாவடியில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல, தமிழக வரும் கேரளா பதிவெண் கொண்ட வாகனங்களை திராவிடர் கழகத்தினர் தடுத்து நிறுத்துவதால் கோவை வழியாக தமிழகம் வரும் கேரள பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், அசம்பாவீதம் ஏதும் நிகழாமல் இருக்க இருமாநில எல்லைப் பகுதியான கோவை, மீனாட்சிபுரம் சோதனைச்சாவடி அருகே போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.