அரசியல் பயணத்தை இன்று தொடங்கிய நடிகர் கமலஹாசன், ''மக்கள் நீதி மய்யம்" என தனது கட்சிக்கு பெயரிட்டுள்ளார்.
அரசியல் பயணத்தை இன்று தொடங்கிய நடிகர் கமலஹாசன், ''மக்கள் நீதி மய்யம்" என தனது கட்சிக்கு பெயரிட்டுள்ளார்.

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து இன்று தனது அரசியல் பயணத்தை நடிகர் கமலஹாசன் தொடங்கினார். கலாம் வீட்டில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கலாமின் பேரன் சலீம் அப்துல்கலாம் படம் பொறித்த நினைவுப் பரிசை கமலுக்கு வழங்கினார். அப்துல்கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயரை சந்தித்து கமலஹாசன் வாழ்த்துக்கள் பெற்றார். இதனையடுத்து, கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வெளியே நின்று பார்த்தார். பின்னர், அவர் தான் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றார்.
இந்நிலையில், கலாம் வீட்டுக்குச் சென்றது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாக அவர் பதிவிட்டுள்ளார். “பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்”, என கமலஹாசன் பதிவிட்டுள்ளார்.

பின்னர், மண்டபம் மீனவர்களுடன் அவர் கலந்தாலோசிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மண்டபம் கணேஷ் மஹாலில் கூடி இருந்த மீனவர்களிடம் கமல் பேசினார். இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்ட அவர், மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்த நடிகர் கமல், ''மக்கள் நீதி மய்யம்" என தனது கட்சிக்கு பெயரிட்டுள்ளார்.