கோவையில் ஏர்செல் நிறுவன சேவை முடங்கியதால், அதன் வாடிக்கையாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை : கோவை மற்றும் திருப்பூரில் ஏர்செல் நிறுவன சேவை முடங்கியதால், அதன் வாடிக்கையாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் மிகப்பெரிய மொபைல் ஆப்ரேட்டர் சர்வீசராக இருந்தது ஏர்செல் நிறுவனம். கிராமங்களில் முதல் முதலாக டவர் அமைத்து செல்போன் இணைப்புகளை அளித்ததால், இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் உருவாகினர். கோவையை தலைமையிடமாக கொண்டு தமிழக ஏர்செல் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் சர்வீஸ் வழங்கிவந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனது நிறுவனத்தின் அலைவரிசைகளை டவரோடு சேர்த்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்டு அங்கு செயல்பட்ட தனது கிளைகளை மூடியது.

தமிழகத்தில் ஏர்செல் தனது சேவையை வழங்கும் என அறிவித்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் ஏர்செல் நிறுவனத்தின் சிக்னல் சரியாகக் கிடைக்காமல் அதன் வாடிக்கையாளர்கள் தவித்து வந்தனர். தமிழக ஏர்செல் நிறுவனத்தையும் மூடப்போகிறார்கள் என்கிற தகவல் பரவியது. இதனால், பயந்த பல ஏர்செல் வாடிக்கையாளர்கள் போர்ட் மூலம் வேறு நிறுவனத்துக்கு மாற முடிவு செய்து ரெக்வெஸ்ட் தந்துவிட்டு காத்திருந்தனர். நிறுவனத்தை மூடவில்லை, அதுவெறும் வதந்தி என ஏர்செல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குப் பதிலாக குறுந்தகவல் அனுப்பியது.

இதனிடையே, இன்று கோவையில் பெரும்பாலான ஏர்செல் வாடிக்கையாளர்களின் செல்போன் டவர் முற்றிலும் முடங்கியது. இதனால், ஆயிரக்கணக்கான ஏர்செல் வாடிக்கையாளர்கள் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், அ.தி.மு.க., அலுவலகம் அருகே அமைந்துள்ள ஏர்செல் அலுவலகத்தை, அதன் வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். அப்போது, சேவை முடங்கியது தொடர்பாக, அதிகாரிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

இதேபோல, திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக ஏர்செல் செல்போன் நிறுவனத்தின் சேவை சரிவர கிடைக்கவில்லை. இந்நிலையில், இன்று காலையிரிந்தே ஏர்செல் நிறுவனத்தின் சேவை திடீரென முடங்கியது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஏர்செல் வாடிக்கையாளர் சேவை மையத்தை திடீரென முற்றுகையிட்டனர். இதனையடுத்து, போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுட்டனர். உரிய நடவடிககை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.